தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ள கர படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் பட குழுவினர் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்.
கர என்று பெயரிடப்பட்டுள்ள க்ரைம் த்ரில்லர் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மமிதா பைஜு, ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ளனர். வரும் ஏப்ரல் 30, 2026 அன்று படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா, கேஎஸ் ரவிக்குமார், சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் பிரித்வி ராஜன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து இந்த படத்தில் நடித்தது பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இயக்குனர் விக்னேஷ் ராஜா பேசும் போது, “கர படத்தில் அரசியல் பேசி உள்ளோம். அது தான் படத்தின் மையக்கரு. ஆனால் அது மெயின் ஸ்ட்ரீம் அரசியலாக இருக்காது. இந்த படத்தின் கதை வேலூரில் நடந்தது. நான் ராமநாதபுரத்தில் நடப்பது போல் மாற்றி உள்ளேன். ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய இரண்டுக்கும் வட்டார வழக்குகளில் பெரிய வித்தியாசம் இருக்காது. எனவே டவுன் சவுத் என்ற பொதுவான வட்டார வழக்கை தான் படத்தில் பயன்படுத்தி உள்ளோம். கதாநாயகி மமிதாவிற்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரம் உள்ளது. நாயகனை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு அவர் தான் உதவுவார். கர படத்தில் பல மூத்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்களை பெரிதாக நான் இயக்கவில்லை. ஒவ்வொருவரின் கெட்டப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அதன் மூலம் அவர்களுக்கு அந்த கதாபாத்திரம் பற்றிய ஒரு புரிதல் வந்தது. படத்தில் தனுஷ் சாரோடு படம் முழுவதும் பயணிக்கும் ஒரு முக்கிய கூட்டாளியாக பிரித்வி நடித்துள்ளார். தனுஷ் சாருக்கு அப்பாவாக கருணாஸ் சாரும், இவர்களோடு ஜெயராம், சுராஜ், ஸ்ரீ ஜாரதி உள்ளிட்ட கிட்டத்தட்ட ஏழு முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் உள்ளனர்.
முதலில் சுராஜ் வெஞ்சாரமூடு சார் கதாபாத்திரத்திற்கு நிறைய பேரிடம் பேசினோம். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு அழுத்தம் இல்லை என்று கூறி மறுத்து விட்டனர். பின்பு அந்த கதாபாத்திரத்தில் சில மாற்றங்கள் செய்தபோது, ஒரு ஹீரோ ரேஞ்ச்க்கு உயர்ந்தது. சுராஜ் வெஞ்சாரமூடு சாரை நிறைய படங்களில் பார்த்துள்ளேன். ஆனால் அவர் தமிழில் நடிப்பார் என்பது தெரியாது. வீர தீர சூரன் படத்தில் அவர் நடித்த பின்பு தான் அவரிடம் இந்த கதையை சொன்னேன். இந்த கதையை கேட்டவுடன் புரிந்து கொண்டு நடிக்க சம்மதித்து விட்டார். படத்தில் வயலன்ஸ் மிகவும் கம்மியாகத்தான் இருக்கும். கதைக்கேற்ற ஆக்சன் காட்சிகள் இருக்கும். படத்திற்கு சென்சார் முடிந்து விட்டது. ஏப்ரல் 30ஆம் தேதி படம் வெளியாகிறது.” என்று கூறினார்.
இயக்குனர் மற்றும் நடிகர் கேஎஸ் ரவிக்குமார் பேசும் போது, “இயக்குனர் விக்னேஷ் ராஜா ஒவ்வொருவரிடம் பண்பாக நடந்து கொண்டார். ஏதேனும் கரெக்ஷன் இருந்தால் கூட அருகில் வந்து காதில் தான் சொல்லுவார். தனுஷ் சாரை தாண்டி ஒவ்வொருவரிடமும் அதே பாணியை தான் கடைப்பிடித்தார். இதனாலேயே நாம் சரியாக பண்ணி விட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டது. நாம் ஏதாவது மாற்றி செய்யலாமா என்று கேட்டால், அதற்கு முன்பும் மற்றும் பின்பும் என்ன நடக்கும் என்பதை கூறுவார். அதன் பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்து விடும். ராமநாதபுரம் ஒரு வறட்சியான பூமி. ஆனால் நாங்கள் சென்றபோது மழை வந்து பசுமையாக மாறிவிட்டது. அதன் பிறகு வறண்ட காட்சிகளை எல்லாம் பின்பு தான் படமாக எடுத்தோம். தனுஷ் சாரிடம் படப்பிடிப்புக்கு இடையில் பேசவே முடியாது. அவரது மனதில் பல்வேறு விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜாலியாக பேசுவார்.
நடிகர் பிரித்வி ராஜன் பேசுகையில், “நான் ப்ளூ ஸ்டார் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான கதைகளை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது இயக்குனர் விக்னேஷ் ராஜா வேல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ண உள்ளார் என்றும், அதில் என்னுடைய பெயரும் உள்ளது என்றும் தகவல்கள் வந்தன. அதன் பிறகு நான் அவரை தொடர்பு கொண்டு பேசினேன். பிறகு ஆடிஷன் வைத்தார்கள். பிறகு தான் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகன். நடிக்க வந்த பிறகு நிறைய தடவை என்னை இன்ஸ்பயர் செய்துள்ளார். அவருடன் நடிப்பது மிகப் பெரிய பாக்கியம். மேலும் ஜெயராம் சார், சுராஜ் சார், கருணாஸ் சார், கேஸ் ரவிக்குமார் சார் ஆகியோருடன் நடிப்பதை பெருமையாக உணர்கிறேன்” என்று கூறினார்.
சுராஜ் வெஞ்சாரமூடு பேசுகையில், “மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்துள்ளேன். தமிழிலும் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருகிறது. தமிழ் மக்கள் எனக்கு கொடுத்து வரும் வரவேற்பு ரொம்ப ரொம்ப சந்தோசமாக உள்ளது. எனக்கு ஒரு படத்தில் நடித்தால் போதும், அது ஹீரோ.. வில்லன் என எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை” என்று தெரிவித்துள்ளார். கர படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஏப்ரல் 30 அன்று பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.