தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் “பரிமளா & கோ”.
“தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ்.
விரைவில் இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம். “சிறந்த நடிகர்கள்” என்று சொன்னால் என் மனதில் முதலில் தோன்றுபவர்கள் ஜெயராம் சார் மற்றும் ஊர்வசி அம்மா. அவர்களுடன் சேர்ந்து நடிப்பது எனக்கு ஒரு பெரிய கனவு. இருவரும் மிகுந்த புத்திசாலித்தனமும், ஆழமான உணர்வும் கொண்ட நடிகர்கள். அவர்களுடன் ஒரே காட்சியில் இருப்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. முன்னதாக ஒரு படத்திற்காக ஜெயராம் சாரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தேன். நான் கதையை மிகவும் தீவிரமாகச் சொன்னேன். அவர் அமைதியாக முழுக்கக் கேட்டுவிட்டு சிரித்தபடி, “நான் செய்யலாம் தம்பி” என்றார். அந்த ஒரு வார்த்தையே எனக்கு பெரிய ஆச்சரியம் கொடுத்தது.
ஏன் அவர் பெரிய நடிகர் தெரியுமா? வாழ்க்கையில் “இல்லை” என்று சொல்ல வேண்டிய இடத்தில் அதைத் தெளிவாக சொல்லத் தெரிந்தவர். சினிமாவில் பலருக்கு அது முடியாது. எல்லாவற்றிற்கும் “சரி” என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பது ஒரு பெரிய குணம். ஜெயராம் சாரிடம் அந்த தெளிவு இருக்கிறது.
பாண்டியராஜை நான் பன்னிரண்டு வருடங்களாக அறிவேன். ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளில் சந்திப்போம். மெதுவாக பழக ஆரம்பித்தோம். அவர் அலுவலகத்திற்கு சென்றால் நண்பர்களோடு உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருப்போம். அந்த இடம் ஒரு குடும்பம் போல உணர்வு தரும். அவர் மிகவும் அன்பான மனிதர். எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் எல்லோரிடமும் ஒரே மாதிரி அன்பாக நடந்து கொள்வார். அந்த நட்புதான் இந்த படத்திற்கும் காரணம்.
தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கும். மணிரத்னம் சாரின் படங்களில் அழகான காட்சியமைப்புகள் இருக்கும். சேரன் படங்களில் மனிதநேயம் மற்றும் தர்மம் இருக்கும். தியாகராஜன் குமாரராஜாவின் படங்களில் வித்தியாசமான பைத்தியக்காரத் தனம் இருக்கும். அதுபோல பாண்டியராஜின் மிகப்பெரிய பலம் மொழி.
அவர் ஒரு வார்த்தையை ரசித்துவிட்டால் அதை உயிரோடு பிடித்து வைத்துக்கொள்வார். வட்டார மொழி, மனிதர்கள் பேசும் இயல்பான சொற்கள், அந்த மொழியின் நுணுக்கங்கள் — இவையெல்லாம் அவருக்குள் ஆழமாக பதிந்திருக்கின்றன. அவர் மனிதர்களை மட்டும் பார்க்கவில்லை; அவர்களுடைய மொழியையும் கவனிக்கிறார். அதனால்தான் அவர் படங்களில் உரையாடல்கள் மிகவும் இயல்பாக இருக்கும்.
அப்படித்தான் பாண்டியராஜும். அவர் பெரிய கல்வி கற்றவரா என தெரியாது. ஆனால் மொழியை அவர் உயிரோடு உணர்கிறார். அதனால்தான் அவர் படங்களில் இருக்கும் உரையாடல்கள் மக்கள் மனதில் நேராக போய் சேர்கின்றன. அவருக்கு ஒரு பெரிய தெளிவு இருக்கிறது. “ஒரு தயாரிப்பாளர் எனக்கு பணம் கொடுக்கிறார்; நான் அவருக்கு வெற்றிப் படம் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், இரண்டு மணி நேரம் பார்வையாளரை மகிழ்விக்க வேண்டும்” — இந்த இரண்டிலும் அவர் தெளிவாக இருக்கிறார். அதனால்தான் அவர் படங்கள் வணிக ரீதியாகவும், மக்களுக்கு நெருக்கமாகவும் இருக்கும்.
தமிழ் சினிமாவில் மிகவும் தெளிவாக சிந்திக்கும் இயக்குநர்களில் அவர் ஒருவர் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு காட்சியை எடுக்கும்போது தேவையற்ற குழப்பமே இருக்காது. எது வேண்டும், எது வேண்டாம் என்று நேராகச் சொல்லிவிடுவார். அதனால் நடிகர்களுக்கும் வேலை மிகவும் எளிதாகிவிடும்.
அவர் மிகவும் கட்டுப்பாடுடன் வேலை செய்கிறார். காலையில் ஆறு மணிக்கே படப்பிடிப்பு தளத்தில் இருப்பார். எட்டு மணி நேரத்தில் எவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துவிடுவார். பட்ஜெட்டிற்குள், திட்டமிட்ட நாட்களுக்குள் படத்தை முடிப்பதில் அவர் வல்லவர்.
இந்த படத்தில் என்னை நடிக்க அழைத்தபோது, முதலில் ஒரு கதையைச் சொல்ல வந்தார். அவர் கதை சொல்லும் விதமே வேற மாதிரி. கதையை சொல்லிக்கொண்டே நம்மை அதற்குள் இழுத்து விடுவார். ஒரு dark comedy கதையை அவர் சொல்லும்போது நான் சிரித்துக்கொண்டே கேட்டேன். உடனே “இது நன்றாக இருக்கும்” என்று நம்பிக்கை வந்தது.
இந்த படத்தில் நடித்த அந்த இரண்டு இளம் நடிகைகளும் மிகவும் திறமையானவர்கள். உடனுக்குடன் உணர்ச்சியைப் பிடித்து நடித்து விடுவார்கள். சாண்டி மாஸ்டரும் அதே மாதிரி. அளவில்லாத ஆற்றல்.
மொத்தத்தில், இந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சிரிப்பு, நட்பு, அன்பு நிறைந்த அனுபவமாக இருந்தது. இந்த படம் மக்களை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.