ஆர்யா – ஜியேன் கிருஷ்ணகுமார் கூட்டணியில் உருவான ‘ஆனந்தன் காடு’: பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

வரவிருக்கும் தமிழ்–மலையாள திரைப்படமான ‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா, இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார், நடிகர் இந்திரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

நிகழ்வின் போது படத்தின் கதை, பின்னணி மற்றும் உருவாக்க அனுபவங்கள் குறித்து படக்குழுவினர் விரிவாக பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி தொடர்பான கேள்விகளுக்கு இயக்குநர் விளக்கம் அளித்தார். படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் சில உண்மை நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், திரைப்படத்தின் முழு அனுபவத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் நிகழ்வில் பேசுகையில் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார், “இது வெறும் ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; உணர்வுகள், மனிதர்களின் வாழ்க்கை மற்றும் பல அடுக்குகள் கொண்ட கதைக்களத்தை உள்ளடக்கிய திரைப்படம். சில வரலாற்றுப் பின்னணிகளை கொண்டிருந்தாலும், படம் எந்த சமூகத்தையோ அல்லது மக்களையோ புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

நடிகர் ஆர்யா பேசுகையில், “இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பில் உருவான இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய முயற்சி. முரளி கோபியின் பல அடுக்குகள் கொண்ட திரைக்கதையை எந்த சமரசமும் இல்லாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார். தொழில்நுட்ப ரீதியாகவும், கதைக்கள ரீதியாகவும் இது மிகுந்த திருப்தி அளிக்கும் படைப்பாக இருக்கும்” என்று கூறினார்.

மேலும், படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், பார்வையாளர்கள் உணர்வுகளை முழுமையாக அனுபவிக்கும்படி தனித்துவமான வெளியீட்டு வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

படத்தின் ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் மற்றும் இடைவேளை பகுதி (Interval Block) குறித்து ஆர்யா சிறப்பாகக் குறிப்பிட்டார். படத்தில் நடித்துள்ள இந்திரன்ஸ், சுனில், விஜயராகவன், தேவமோகன், நிகிலா விமல் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பையும் அவர் பாராட்டினார்.

படத்தின் ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள், கலை அமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பேசிய ஆர்யா, படக்குழுவின் அர்ப்பணிப்பை பாராட்டியதுடன், திரையரங்கில் இந்த திரைப்படம் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் இந்திரன்ஸ் தனது உரையில், “கருப்பு திரைப்படத்திற்கு முன்பே நான் நடித்த படம் ஆனந்தன் காடு. இதில் எனது திரைப்பயணத்தில் முக்கியமான மற்றும் சவாலான கதாபாத்திரம் ஒன்றை செய்திருக்கிறேன் என்றும். படம் வெளியான பிறகு ரசிகர்கள் அதை பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

நிகழ்வின் போது படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் பாராட்டப்பட்டது. ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள், பின்னணி வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் எஸ்.விநோத் குமார் பேசுகையில், தற்போதைய OTT சூழலிலும் ரசிகர்களின் திரையரங்கு அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து ‘ஆனந்தன் காடு’ திரைப்படத்தை உலகளவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்தார். மேலும், 60 கோடிக்கும் மேற்பட்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் முழுமையாக ரசிகர்களின் ஆதரவை நம்பியே திரையரங்குகளில் வெளியாகிறது என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்வின் நிறைவில், படத்தை உலகளவில் வெளியிடும் Gokulam Movies நிறுவனத்திற்கும் அதன் தலைவர் கோகுலம் கோபாலனுக்கும் படக்குழுவினர் நன்றியை தெரிவித்தனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஆனந்தன் காடு’ திரைப்படம் ஜூன் 25ஆம் தேதி உலகம்  முழுவதும் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகவுள்ளது.

 

Comments (0)
Add Comment