பூச்சிக்கொல்லி விவசாயத்தின் அதிர்ச்சி பின்னணியை சொல்லும் ‘தி இந்தியா ஸ்டோரி’!

 

சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி விவசாயத்தின் ஆபத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ (The India Story: Slow Poison in Progress)திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், அன்றாட உணவுப் பொருட்களில் கலந்து வரும் பூச்சிக்கொல்லி நச்சுகள் மனிதர்களின் உடல்நலத்திலும், குறிப்பாக இளம் தலைமுறையின் எதிர்காலத்திலும் ஏற்படுத்தும் தாக்கத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Zee Studios நிறுவனம், MIG Production & Studios உடன் இணைந்து வழங்கும் இந்தப் படத்தை இயக்குநர் சேட்டன் DK இயக்கியுள்ளார். கதையை சாகர் பி. ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வெளியாகியுள்ள டீசர், பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் அபாயங்களை வெளிச்சமிட்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரம் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. உணவில் கலந்து வரும் நச்சுப் பொருட்கள் மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் நீண்டகால விளைவுகளையும், அதற்கு எதிராக போராடும் கதாபாத்திரங்களின் பயணத்தையும் டீசர் வலுவாக சித்தரிக்கிறது.

இயக்குநர் சேட்டன் DK கூறுகையில், “‘தி இந்தியா ஸ்டோரி’ என்பது வெறும் திரைப்படம் மட்டுமல்ல; சமூகமாக நாம் அவசியம் பேச வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சினையை முன்வைக்கும் படைப்பு. பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளையும், அதன் காரணமாக உருவாகும் அமைதியான உடல்நல நெருக்கடியையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம். டீசர் இந்தப் பயணத்தின் ஒரு முன்னோட்டம் மட்டுமே. மக்கள் தாங்கள் உண்ணும் உணவு குறித்து சிந்திக்கவும், விழிப்புணர்வுடன் செயல்படவும் இந்தப் படம் தூண்ட வேண்டும்”என்றார்.

நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே பேசுகையில், “இந்தக் கதையின் கருப்பொருள்தான் என்னை மிகவும் ஈர்த்தது. ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் பிரச்சினையாக இருந்தாலும், அதன் நீண்டகால விளைவுகள் குறித்து நாம் அதிகம் சிந்திப்பதில்லை. இந்தப் படத்தில் ஒரு சாதாரண தந்தையின் உணர்வுபூர்வமான போராட்டத்தை ரசிகர்கள் காண்பார்கள். இது பொழுதுபோக்கைத் தாண்டி சமூகத்தில் அவசியமான உரையாடலைத் தொடங்கும் திரைப்படமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

நடிகை காஜல் அகர்வால் கூறுகையில், “ஒரு தாயாக இந்தக் கதை என்னை மிகவும் பாதித்தது. பெற்றோர்களின் அச்சங்களையும், எதிர்கால தலைமுறையின் நலனையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், நாம் சாப்பிடும் உணவு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் என நம்புகிறேன்” என்றார்.

இப்படத்தின் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி விநாயக் சைந்தானி, அனிதா ஜாதவ், விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பகவத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, படத்தொகுப்பாளர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி மற்றும் ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ திரைப்படம், விழிப்புணர்வும் விறுவிறுப்பும் இணைந்த திரை அனுபவமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை டீசர் ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment