“பெரிய நட்சத்திரமாக அவசரப்படவில்லை… சரியான கதாபாத்திரத்துக்காக காத்திருக்கிறேன்” – கார்த்திகேயன்!

‘டீ கே’ (Dee Kay) என ரசிகர்களால் அறியப்படும் நடிகர் கார்த்திகேயன் டிகே, பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பிரபல தொலைக்காட்சித் தொடர்கள் முதல் ஓடிடி மற்றும் திரைப்படங்கள் வரை தொடர்ந்து பயணித்து வரும் இவர், பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ‘கனா காணும் காலங்கள்’, ‘ஹார்ட் பீட்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் பரிச்சயமான கார்த்திகேயன், ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ தொடரிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பலதரப்பட்ட பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.

கார்த்திகேயனின் முகபாவனைகள், தோற்றம் மற்றும் திரையில் வெளிப்படுத்தும் ஸ்டைல் ஆகியவை இளம் வயது கமல்ஹாசனை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் குறிப்பிடுகின்றனர். இதனை கார்த்திகேயன் ஒரு மிகப்பெரிய பாராட்டாகவே பார்க்கிறார். தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், தனது நடிப்புப் பயணத்தின் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாகவும் கமல்ஹாசனை அவர் கருதுகிறார்.

கமல்ஹாசனின் திரைப்படங்களில் ‘அன்பே சிவம்’ திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனக் கூறும் கார்த்திகேயன், வழக்கமான ஹீரோயிசத்தைத் தாண்டி கதாபாத்திரத்திற்கும் நடிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து கமல்ஹாசன் தேர்வு செய்த படங்களும் கதாபாத்திரங்களும் தன்னை பெரிதும் ஈர்த்ததாக தெரிவிக்கிறார். கமல்ஹாசனைப் போன்ற தோற்றம் இருப்பதாகக் கூறப்படுவதை தனது திரைப்பயணத்தில் ஒரு பலமாகவே கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.

நடிப்புடன் இசையின் மீதும் கார்த்திகேயனுக்கு ஆழமான ஆர்வம் உள்ளது. குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கலைப் பயணத்திலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு வாய்ப்புகள் தொடர்ந்து வந்தாலும், அவற்றை உடனடியாக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக தனது கதாபாத்திரங்களை கவனமாகத் தேர்வு செய்வதில் கார்த்திகேயன் நிதானத்தை கடைப்பிடித்து வருகிறார்.

“நான் பெரிய நட்சத்திரமாக வேண்டும் என்று ஒருபோதும் அவசரப்படுவதில்லை. சரியான நேரத்திற்காகக் காத்திருந்து, சரியான வாய்ப்புகளைத் தேர்வு செய்து, உண்மையிலேயே எனக்கு சவாலாக இருக்கும் கதாபாத்திரத்திற்காக காத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வெறும் கவனத்தைப் பெறுவதற்காக அவசரப்படுவதைவிட, படிப்படியாக வளர்வதையே விரும்புகிறேன்” என்கிறார் கார்த்திகேயன்.

வெறுமனே திரையில் தோன்றி மறையும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதைவிட, ஒரு நடிகராக தன்னுள் இருக்கும் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தக்கூடிய சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே கார்த்திகேயன் விரும்புகிறார். தொலைக்காட்சி, ஓடிடி மற்றும் திரைப்படங்கள் என பல்வேறு தளங்களில் கிடைத்த அனுபவத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், வித்தியாசமான கதாபாத்திரங்களை எதிர்நோக்கி வருகிறார்.

பட்டுக்கோட்டையில் இருந்து தனது கலைப் பயணத்தைத் தொடங்கி, தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை உருவாக்கி வரும் கார்த்திகேயன், தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களுக்காக பொறுமையுடன் காத்திருக்கிறார். சரியான கதாபாத்திரம் மற்றும் சரியான வாய்ப்பு கிடைக்கும் போது, தனது நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை ரசிகர்களுக்கு காட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

Comments (0)
Add Comment