இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் (MAFI) வரும் நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, சென்னையின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானத்தில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.
35 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள், 5 ஆண்டு இடைவெளி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெறும். இந்த சாம்பியன்ஷிப்பில் போட்டியில் 30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,000 வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியின் நோக்கம், உலக மாஸ்டர்ஸ் தடகளத்தின் வழியாக போட்டித் திறனின் மூலம் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதே ஆகும்.
முதலில் இந்தோனேஷியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இப்போட்டி, ஜூலை 2025-இல் இந்தியாவிற்கு மாற்றப்பட்டது. நவீன விளையாட்டு வசதிகள் மற்றும் தமிழக அரசின் உறுதியான ஆதரவுடன் சென்னை இயல்பான தேர்வாக அமைந்தது. இதற்கு முன்னர் 2000, 2006-ஆம் ஆண்டுகளில் இப்போட்டிகளை பெங்களூரில் இந்தியா வெற்றிகரமாக நடத்தியதைத் தொடர்ந்து, இப்போது மூன்றாவது முறை இந்தியா இப்போட்டியை நடத்துகிறது.
“தமிழக துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலினிடம் நாங்கள் அணுகியபோது, அவர் உடனே முழு ஆதரவை வழங்கி, போட்டி அமைப்பு குழுவின் Chief Patron ஆகச் சேர ஒப்புக் கொண்டார்,” என இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் (MAFI) பொதுச்செயலாளர் திரு. டேவிட் பிரேம்நாத் தெரிவித்தார்.
பிரபல தமிழ்த்திரைப்பட நடிகர் ஆர்யா இப்போட்டியின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தேசிய சாம்பியனும், தமிழ்நாடு தடகள சங்கச் செயலாளருமான செல்வி. லதா தொழில்நுட்ப இயக்குநராக பணியாற்றவுள்ளார். திரு. மேகநாத ரெட்டி, Member Secretary, SDAT மற்றும் இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் (MAFI) துணைத் தலைவர் திரு. செண்பகமூர்த்தி M ஆகியோரும் உறுதுணையாக உள்ளனர்.
இந்த நிகழ்வில் உலக மாஸ்டர்ஸ் தடகள தலைவர் மார்கிரிட் ஜங் (ஜெர்மனி), செயலாளர் ஜுவான் ஓர்டோனெஸ் (மெக்சிகோ), ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சங்க தலைவர் விவாட் விக்ரந்தநோரோஸ் (தாய்லாந்து) மற்றும் செயலாளர் எஸ். சிவபிரகாசம் (மலேசியா) ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
2023-ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த போட்டியில் இந்தியா 264 பதக்கங்களை வென்றது. இந்த முறை தாயகத்தில் 2,500 வீரர்களைக் கொண்ட மிகப்பெரிய அணியை வெளியிட்டு அந்த சாதனையை மிஞ்சுவதே இந்தியாவின் குறிக்கோள்.
“துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலினின் நிலையான ஆதரவிற்கும், பிராண்ட் தூதராக இணைந்த நடிகர் ஆர்யாவுக்கும் நன்றி. மறக்க முடியாத சாம்பியன்ஷிப் நடத்துவதற்காக அயராது உழைக்கும் குழுவினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி,” என திரு. டேவிட் பிரேம்நாத் தெரிவித்துள்ளார்.