’தடயம்’ இணையத் தொடர் விமர்சனம்

24

ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தமிழக கிராமம் ஒன்றில் கணவன், மனைவி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கொலையை விசாரிக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரகனி சில தயடங்களை சேகரித்து வைத்திருக்கும் நிலையில், அதே பாணியில் மற்றொரு தம்பதி கொலை செய்யப்படுகிறார்கள். இப்படி நான்கு பேர் கொலை செய்யப்பட்டதால் பரபரப்புக்குள்ளாகும் காவல்துறை, இன்ஸ்பெக்டர் ஷிவதா தலைமையில் தனிப்படை அமைக்கிறது. அந்த குழுவில் சமுத்திரகனியை சேர்க்க வேண்டாம் என்று உயர் அதிகாரி அறிவுறுத்துகிறார்.

ஆனால், சமுத்திரகனி பற்றி அறிந்த ஷிவதா, அவரை குழுவில் சேர்ந்துக் கொண்டு கொலை வழக்கை விசாரிக்கும் போது, கொலை செய்தது இரண்டு பேர் என்றும், அவர்கள் நான்கு பேரை அல்ல, சுமார் 60-க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்திருக்கிறார்கள், என்ற உண்மையை சமுத்திரகனி கண்டுபிடிக்கிறார்.

கொலை செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இருக்கும் பணம், நகைகள் எதுவும் திருடப்பாடமல், ஆணின் இடுப்பு அருணாக்கயிறும், பெண்ணிடம் இருந்து தாலி சங்கிலியும் பறிக்கப்பட்டிருப்பதை முக்கிய தடயமாக கொண்டு, முகம் தெரியாத கொலையாளிகளை பிடிக்க களத்தில் இறங்கும் காவல்துறை குழு, அவர்களை எப்படி பிடித்தது ?, அவர்களின் தொடர் கொலைக்கான பின்னணி என்ன ? என்பதை பல்வேறு திருப்பங்களோடும், பதற வைக்கும் உண்மை சம்பவத்தின் பின்னணியோடும் சொல்வது தான் ‘தடயம்’.

முதல் பாகத்தின் ஆரம்பத்திலேயே கொடூர கொலை சம்பத்தை காட்சிப்படுத்தி பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் நவீன்குமார் பழனிவேல், இரண்டாவது அத்தியாயத்தில் கொலை செய்தது யார் ? என்ற மர்ம முடிச்சை அவிழ்த்தாலும், கொலைக்கான காரணம் என்ன ?, அவர்களின் தொடர் கொலைகளின் பின்னணியோடு, அவர்களை தமிழக காவல்துறை எப்படி கண்டுபிடித்து கைது செய்தது? என்ற சம்பவங்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் அதிர வைக்கும் விதத்தில் சொல்லி அசத்தியிருக்கிறார்.

தொடரின் நாயகனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, காவல்துறை சார்ந்த கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும், இதில் தன்னை புதியவராக காட்டிக்கொண்டிருக்கிறார். துறை ரீதியாக எதிர்கொண்ட கசப்பான சம்பவங்களால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ஒரு நபராக மிக இயல்பாக நடித்திருக்கும் சமுத்திரகனி, உடல் ரீதியாகவும் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது கூர்மையான சிந்தனை மூலம் கொலை குற்றவாளிகளை நெருங்குவதோடு, அவர்களின் தொடர் கொலைகளின் மறைக்கப்பட்ட உண்மைகளை ஒவ்வொன்றாக கண்டறியும் அவரது விசாரணை முறையும், அதில் வெளிப்படுத்திய நடிப்பும் கவனம் ஈர்க்கிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஷிவதா, காக்கி சீறுடையிலும் அழகியலோடு வலம் வருகிறார். தனது அளவான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருப்பவர், திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்.

’புஷ்பா’ பட புகழ் ராஜ் தனது கண்கள் மற்றும் மேனரிசம் மூலம் மிரட்டியிருக்கிறார். அவரது பார்வையே பார்வையாளர்களை படபடக்க வைக்க, அவரது செயல்கள் அனைத்தும் அலற வைக்கிறது. அவரது தம்பியாக நடித்திருக்கும் பிரேமும் தனது பங்கிற்கு பயமுறுத்தும் பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் மூணாறு ரமேஷ், சுந்தரபாண்டியன், கொற்றவை, விஷாகன், புலிபாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ரவிச்சந்திரன், கார்த்தி, சுபர்னா, தயாளன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கே.கே-வின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் இசை, தினேஷ் குமாரின் படத்தொகுப்பு, மணிகண்டன் சந்திரசேகரின் கலை இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் பணி பெரும் பலம் சேர்த்திருக்கிறது. 1999 ஆம் ஆண்டு நடக்கும் கதைக்கான லொக்கேஷன், வாகனங்கள், வீடுகள் மற்றும் வண்ணங்கள் என ஒவ்வொன்றையும் நுணுக்கமாக கையாண்டிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கும் நவீன்குமார் பழனிவேல், உண்மை சம்பவத்தையும், அதன் பின்னணியையும் மிக நுட்பமாக விவரித்திருப்பதோடு, அதில் இருக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை, ஒவ்வொரு அத்தியாயத்திலும், பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் சொல்லியிருக்கிறார்.

முதல் இரண்டு பாகத்தில், மர்ம முடிச்சுகளை அவிழ்த்தாலும், அதன் பிறகு போடப்படும் மர்ம முடிச்சுகளைக் கொண்டு இறுதி அத்தியாயம் வரை, அடுத்தது என்ன நடக்கும் ? என்ற கேள்வியோடும், படபடப்போடும் பார்வையாளர்களை தொடருடன் பயணிக்க வைத்து பாராட்டு பெற்று விடுகிறார் இயக்குநர் நவீன்குமார் பழனிவேல்.

மொத்தத்தில், ‘தடயம்’ பார்வையாளர்களை கவர்ந்த கிரைம் திரில்லர் தொடர்களில் முக்கிய தடம் பதிக்கும்.

ரேட்டிங் 3.8/5