‘தாய் கிழவி’ திரைப்பட விமர்சனம்

62

கணவனை இழந்த மூதாட்டி ராதிகா சரத்குமார், கடின உழைப்பால் சுயமாக சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, அதை தனது பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தான் உயிருடன் இருக்கும் வரை தானே அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். வட்டிக்கு பணம் கொடுக்கும் அவர், அதை வசூலிப்பதில் கரார் பேர்வழி என்பதால், ஊர் மக்கள் அவரை பார்த்தாலே அச்சப்படுவதோடு, அவர் எப்போது இறப்பார் என்ற எண்ணத்தோடும் இருக்கிறார்கள். அதேபோல், அவரது மூன்று மகன்களும், ஒரு மருகனும் சொத்துக்காக அவரது இறப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

திடீரென்று ராதிகா உடல்நிலை பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்து விடுகிறார். இதனால், ஊர் மக்களும், அவரது சொந்த மக்களும் அவரது இறப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க, ஒரு நகைக்கடை முதலாளி மூலம் அவர் ஒரே சமயத்தில் 160 பவுன் தங்க நகைகள் வாங்கிய விபரம் மகன்களுக்கு தெரிய வருகிறது.

அந்த ஊர் வழக்கப்படி, தாய் இறந்த பிறகு வீடு, நிலம் ஆகியவை மகன்களுக்கும், அவரது நகைகள் பெண் பிள்ளைக்கு சேரும் என்பதால், தாயின் இறப்பை தள்ளி வைத்து, அதற்குள் யாருக்கும் தெரியாமல் மொத்த நகைகளையும் கைப்பற்றி பிரித்துக் கொள்ள மகன்கள் திட்டம் போடுகிறார்கள். அதற்காக ராதிகாவின் இறப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவரது மூன்று மகன்கள், அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் நினைத்தது போல் ராதிகா பிழைத்தாரா?, அவரது நகைகளை மகன்கள் கைப்பற்றினார்களா ? என்பதை தென் தமிழக கிராமத்து மக்களின் வாழ்வியலாகவும், தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்ட பெண்ணின் கதையாகவும் சொல்வதே ‘தாய் கிழவி’.

ஒரு பெண் சுயமாக இயங்குவதோடு, வயதானாலும் தன்னம்பிக்கை குன்றாமல், தைரியத்துடன் பிறரின் ஆதரவு மற்றும் அனுதாபத்தை எதிர்பார்க்காமல் வாழ வேண்டும், என்ற கருத்தை நகைச்சுவை உணர்வோடு சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் சிவகுமார் முருகேசன், அதை அதீதமான நாடக உணர்வோடும், செயற்கைத்தனம் மிக்கதாகவும் சொல்லியிருக்கிறார்.

பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில் மூதாட்டியாக நடித்திருக்கும் ராதிகா, தாய் கிழவி என்ற தலைப்பையும், படத்தையும் விளம்பரப்படுத்தும் ஒரு கருவியாக பயன்பட்டிருந்தாலும், அந்த கதாபாத்திரத்தின் ஆன்மாவாக பயணிக்க தவறியிருக்கிறார். தைரியம், திமீர், தன்னம்பிக்கை ஆகியவற்றை தனது அதீதமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்த முயற்சித்திருக்கும் ராதிகா, கிராமத்து உழைக்கும் பெண்மணியாக தனது தோற்றம் மற்றும் நடிப்பின் மூலம் எந்த ஒரு இடத்திலும் பிரதிபலிக்கவில்லை. அதே சமயம், அவரது மேக்கப், மேனரிசம் மற்றும் உடல்மொழி ஆகியவை பார்வையாளர்களுக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும்படி இருப்பதோடு, மண் சார்ந்த வாழ்வியலை சரியாக வெளிப்படுத்த தவறியிருக்கிறது.

ராதிகாவின் மகன்களாக நடித்திருக்கும் சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், மகளாக நடித்திருக்கும் ரைச்சல் ரபேக்கா, மருமகனாக நடித்திருக்கும் முத்துக்குமார், உறவினராக நடித்திருக்கும் முனீஷ்காந்த், நகைக்கடை முதலாளியாக நடித்திருக்கும் இளவரசு ஆகியோர் தங்களது வழக்கமான நடிப்பின் மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும், கதாபாத்திரங்களின் வசன உச்சரிப்பின் ஓசையோடு கலந்து மறைந்து போகிறதே தவிர, மனதில் நிற்கவில்லை.

ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், தன் கேமரா மூலம் தென் தமிழக கிராமத்து மண்ணையும், மண் சார்ந்த மக்களையும் திரையில் கொண்டு வர அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.

பவுனுத்தாய் கதாபாத்திரத்தோடு, அவரது மகன்கள், மகள், அவர்களை சார்ந்த குடும்ப உறவுகள் மற்றும் கிராமத்து மக்கள் என்று காட்சிகளை விட கதாபாத்திரங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர்களின் அறிமுகம், அவர்களின் மன மாற்றம் ஆகியவற்றை விவரிப்பதையே முக்கிய பணியாக செய்திருக்கும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், திரைக்கதையில் இருக்கும் நாடகத்தன்மையை மாற்ற முடியாமல் அதில் மூழ்கியிருப்பது திரையில் தெரிகிறது.

எழுதி இயக்கியிருக்கும் சிவகுமார் முருகேசன், பெண்கள் சுயமாகவும், தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ வேண்டும் என்ற கருத்தை கிராமத்து மூதாட்டி ஒருவரின் மூலம் சொல்ல முயற்சித்திருந்தாலும், அதை அழுத்தமாக சொல்லாமல், கலகலப்பாகவும், கிராம மக்களின் வாழ்வியலாகவும் சொல்லியிருக்கிறார்.

கிராம மக்களின் வாழ்வியலில், அவர்கள் பேசும் வார்த்தைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் சிவகுமார் முருகேசன், சில காட்சிகளின் மூலம் அவர்களை அடி முட்டாள்களாகவும் சித்தரித்திருக்கிறார்.  குறிப்பாக, உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவரை, காலதாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தது குறித்து மருத்துவர், கேலி செய்கிறார். அதை கூட புரிந்துக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள், என்பது போல் அந்த காட்சியை வடிவமைத்து, கிராமத்து மக்களை கலங்கப்படுத்தியிருக்கிறார்கள்.

ரூபாய் நோட்டு எண்ணும் இயந்திரத்தை பயன்படுத்தும் கிராம மக்கள், பாடல்கள் போடும் இயந்திரத்தை மட்டும் அதர பழசாக வைத்திருப்பார்களா?, இப்படி படத்தில் ஏகப்பட்ட குறைகள் நிறைந்திருந்தாலும், அதை நகைச்சுவை என்ற திரையின் மூலம் மறைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், நகைச்சுவை காட்சிகளும், புரியாத மற்றும் கெட்ட வார்த்தைகளோடு, காதை கிழிக்கும் சந்தங்களாக நிறைந்திருப்பதால் திரையரங்கில் சிரிப்பு சத்தத்தை விட, திரைக்குள் இருப்பவர்களின் இரைச்சல் சத்தம் தான் அதிகம் கேட்கிறது.

பிறரை சார்ந்திருக்காமல் பெண்கள் சுயமாக வாழ வேண்டும், அதற்கு அவர்கள் தங்களை எப்படி தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும், என்று சொல்லப்பட்டிருக்கும் விசயமும், படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகளும் படத்தை ரசிக்க வைத்தது.

மொத்தத்தில், ‘தாய் கிழவி’ சிறப்பான படம்.

 

ரேட்டிங் 3/5