மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘வாரணாசி’யில் ருத்ராவாக மாஸ் காட்டும் மகேஷ் பாபு!

7

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் காவியத் திரைப்படமான ‘வாரணாசி – #VARANASI’ படக்குழு, மகேஷ் பாபு ஏற்று நடிக்கும் ‘ருத்ரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வகையில் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

வெளியாகியுள்ள முதல் புகைப்படத்தில், அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுக்கும் ருத்ராவாக மகேஷ் பாபு காட்சியளிக்கிறார். இயல்பான கம்பீரத்துடனும், அமைதியான தோற்றத்துடனும் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படம், அவரது கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இரண்டாவது புகைப்படம், ரசிகர்களை கென்யாவின் மாசாய் மாரா சமவெளிகளுக்கு அழைத்துச் செல்கிறது. ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வைல்ட்பீஸ்ட் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு நடுவே நின்றபடி, ருத்ரா தனது பின்னோக்கிப் பார்வையில் அதிகாரமும் கம்பீரமும் கலந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

இந்த இரண்டு புகைப்படங்களும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான உலகத்திற்கான ஒரு சிறிய முன்னோட்டமாக அமைந்துள்ளன. உலகம் முழுவதும் பயணிக்கும் கதைக்களத்துடன், ஒரு நூற்றாண்டு காலத்தை உள்ளடக்கிய காவியமாக இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தியாவின் புனித நீர்நிலைகளிலிருந்து பூமியின் அடர்ந்த மற்றும் காட்டுப்பகுதிகள் வரை ஒரு மனிதனின் அசாதாரண பயணத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

ருத்ரா கதாபாத்திரம் குறித்து இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி கூறுகையில், ருத்ரா தன்னைவிட பெரியதொரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பிறந்தவன் என்றும், அவன் கோராத ஒரு விதியைச் சுமந்து செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். நகைச்சுவை உணர்வு கொண்டவனாகவும், அதே நேரத்தில் மென்மையான மற்றும் கடுமையான தன்மைகளைக் கொண்டவனாகவும் அந்தக் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரே தருணத்தில் கதாபாத்திரத்தின் கடுமையையும் மென்மையையும் வெளிப்படுத்தக்கூடிய நடிகர்கள் வெகு சிலரே என்றும், அந்தப் பரிமாணங்களை மகேஷ் பாபு ருத்ரா கதாபாத்திரத்திற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் ராஜமௌலி பாராட்டியுள்ளார்.

‘வாரணாசி’ திரைப்படத்தின் ஆப்பிரிக்கப் படப்பிடிப்பு குறித்து பேசிய ராஜமௌலி, கிளிமஞ்சாரோ மற்றும் மாசாய் மாரா பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் பிரமிப்பை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். செயற்கையாக உருவாக்கப்பட்ட அரங்குகளால் வழங்க முடியாத இயற்கையான பிரம்மாண்டத்தை அந்த நிலப்பரப்பு படத்திற்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, காலை நேரங்களில் படப்பிடிப்பு தளத்தில் தங்கள் கண்முன் விரிந்த காட்சிகளின் பிரம்மாண்டத்தை 1.43:1 IMAX திரையால் கூட முழுமையாக உள்வாங்க முடியாது என தான் உணர்ந்ததாக ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில், எம். எம். கீரவாணி இசையமைப்பில் உருவாகி வரும் ‘வாரணாசி – #VARANASI’ திரைப்படத்தை ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி, IMAX தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.