மூன்றாவது படத்திலேயே சைமா சிறந்த நடிகர் விருது – துருவ் விக்ரமுக்கு கிடைத்த பெருமை!

6

தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. அந்த வகையில், இந்தாண்டுக்கான சைமா விருது விழாவில் ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார்.

இளம் நடிகராக தனது திரைப்பயணத்தில் துருவ் விக்ரம் பெற்றுள்ள இந்த அங்கீகாரம், அவரது நடிப்புத் திறமைக்கு கிடைத்துள்ள முக்கியமான கௌரவமாக அமைந்துள்ளது. குறிப்பாக, தனது மூன்றாவது திரைப்படத்திலேயே சைமா விருதுகளில் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை அவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில், துணிவும் போராட்ட குணமும் நிறைந்த விளையாட்டு வீரர் கதாபாத்திரத்தில் துருவ் விக்ரம் நடித்திருந்தார். கதாபாத்திரத்திற்கேற்ப தனது தோற்றம், உடல்மொழி மற்றும் நடிப்பு என பல்வேறு அம்சங்களில் அவர் மேற்கொண்ட மாற்றங்கள் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைந்தன.

கதாபாத்திரத்தின் உணர்வுகள், வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் அதன் பல்வேறு பரிமாணங்களை திரையில் வெளிப்படுத்திய விதத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு கவனம் பெற்றது. குறிப்பாக அழுத்தமான காட்சிகளில் அவரது உடல்மொழியும், உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதமும் கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்த்தன.

ஒரு இளம் நடிகருக்கு மூன்றாவது திரைப்படத்திலேயே சிறந்த நடிகர் விருது கிடைத்திருப்பது, அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. ‘பைசன் காளமாடன்’ படத்தில் தன்னை முழுமையாக கதாபாத்திரத்திற்குள் ஈடுபடுத்திக் கொண்டு நடித்ததற்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், துருவ் விக்ரமின் நடிப்புப் பயணத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், அதிதி ஆனந்த் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் பா. ரஞ்சித் ஆகியோர் தயாரித்துள்ள ‘பைசன் காளமாடன்’ படத்தில் அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாறுபட்ட களத்தையும் அழுத்தமான கதைக்களத்தையும் கொண்ட இப்படத்தில் துருவ் விக்ரம் வெளிப்படுத்திய நடிப்பு, அவரது நடிப்புத் திறனை மேலும் அழுத்தமாக வெளிக்கொண்டு வந்துள்ளது. தற்போது சைமா விருது மூலம் கிடைத்துள்ள இந்த புதிய அங்கீகாரம், அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து துருவ் விக்ரம், ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ எனும் ஆக்‌ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். Mythri Movie Makers தயாரிக்கும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். ‘பைசன் காளமாடன்’ படத்தின் மூலம் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக ஆக்‌ஷன் களத்தில் துருவ் விக்ரம் வெளிப்படுத்தவுள்ள புதிய பரிமாணத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.