நடிகர் பாவா லட்சுமணனுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றிய லெஜன்ட் சரவணன்… வீட்டு உபயோகப் பொருட்களை இலவசமாக வழங்கி உதவி!

36

நடிகர் பாவா லட்சுமணன் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தொழிலதிபரும் நடிகருமான லெஜன்ட் சரவணன், அவரது புதிய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களையும் இலவசமாக வழங்கியுள்ளார்.

சமீபத்தில், வீடு இல்லாமல் திண்ணையில் தங்கியிருந்த பாவா லட்சுமணனின் நிலை குறித்து தகவல் அறிந்த லெஜன்ட் சரவணன், நடிகர் கூல் சுரேஷ், லெஜன்ட் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் மற்றும் மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ்ஆகியோர் மூலம் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். அப்போது, அவருக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ள லெஜன்ட் சரவணன், தற்போது எம்எல்ஏ ஹாஸ்டலில் தங்கி வரும் பாவா லட்சுமணனுக்காக கட்டில், மெத்தை, பீரோ, வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, குக்கர், பாத்திரங்கள், குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்), சோபா செட் உள்ளிட்ட அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் வழங்கியுள்ளார்.

இந்தப் பொருட்கள் அனைத்தும் நடிகர் கூல் சுரேஷ், லெஜன்ட் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் மற்றும் மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ் ஆகியோரின் முன்னிலையில் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.

சிரமமான சூழ்நிலையில் இருந்த நடிகர் பாவா லட்சுமணனுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி, அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றிய லெஜன்ட் சரவணனின் இந்த மனிதநேய செயல், திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது.