‘தில்லானா மோகனாம்பாள்’ நினைவுகளை ராப் இசையில் கொண்டுவரும் கில்லா கே – பால் டப்பா கூட்டணி… வெளியானது ‘அடடா’!
தமிழ் ஹிப்ஹாப் இசையில் தனித்துவமான குரல்களாக வலம் வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா, தங்களது புதிய கூட்டணிப் பாடலான ‘அடடா’வை டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியிட்டுள்ளனர். தமிழ் கலாச்சாரம், சினிமா நினைவுகள், நகைச்சுவை மற்றும் சமகால ஹிப்ஹாப் இசை ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கூர்மையான வரிகள், மனதில் பதியும் ஹூக்ஸ் மற்றும் துடிப்பான இசையுடன் உருவாகியுள்ள ‘அடடா’, தமிழ் அடையாளத்தையும், சினிமாவின் பழைய நினைவுகளையும், வளர்ந்து வரும் பிராந்திய ராப் இசையையும் புதிய தலைமுறைக்கான பாணியில் கொண்டாடுகிறது.
குறிப்பாக, புகழ்பெற்ற தமிழ் திரைப்படமான ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்திலிருந்து உத்வேகம் பெற்றுள்ள ‘அடடா’, அப்படத்தின் பிரபலமான காட்சியமைப்பை சமகால ஹிப்ஹாப் பாணியில் மறுவடிவமைத்துள்ளது. பாடலின் இசை வீடியோவில் பாரம்பரிய கச்சேரி அரங்கம் துடிப்பான ராப் அரங்கமாக மாற்றப்பட்டிருப்பதுடன், பாரம்பரிய காட்சியமைப்புகளும் நவீன ஹிப்ஹாப் அம்சங்களும் சுவாரஸ்யமாக இணைக்கப்பட்டுள்ளன.
குறும்புத்தனமான கதை சொல்லல், நகைச்சுவை கலந்த பஞ்ச் வரிகள் மற்றும் கில்லா கே – பால் டப்பா இருவருக்குமிடையேயான இயல்பான கெமிஸ்ட்ரி ஆகியவை பாடலுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன. தமிழ் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் அதே நேரத்தில், அதை இன்றைய தலைமுறையின் கலாச்சார உரையாடலுக்குள் புதிய கோணத்தில் கொண்டு வரும் முயற்சியாகவும் ‘அடடா’ அமைந்துள்ளது.
தமிழ் ஹிப்ஹாப் உலகில் தங்களுக்கென தனியிடத்தை உருவாக்கியுள்ள இருவருக்கும் இடையேயான நீண்டகால நட்பும், ஒரே மாதிரியான படைப்புச் சிந்தனைகளும் இந்தக் கூட்டணிக்கு வலு சேர்த்துள்ளன. அன்றாட தமிழ் கலாச்சாரம், மொழி மற்றும் வாழ்வியல் அனுபவங்களை தனது இசையில் பிரதிபலித்து வரும் பால் டப்பாவும், கூர்மையான கதை சொல்லல் மற்றும் நகைச்சுவை மூலம் தமிழ் சமூகத்தின் வாழ்வியலை இசையில் பதிவு செய்து வரும் கில்லா கேவும் இணைந்திருப்பது, ‘அடடா’வை மற்றுமொரு கூட்டணிப் பாடலாக இல்லாமல் ஒரு கலாச்சாரக் கொண்டாட்டமாக மாற்றியுள்ளது.
பாடல் குறித்து கில்லா கே கூறுகையில், ‘தில்லானா மோகனாம்பாள்’ போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படத்தை ஹிப்ஹாப் வழியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றும், அதே நேரத்தில் அப்படத்தின் ஆன்மாவையும் உணர்வையும் காப்பாற்ற விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வரியும், காட்சியும், நடிப்பும் ரசிகர்கள் தங்களது வேர்களைப் பற்றி பெருமிதம் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பால் டப்பா கூறுகையில், தமிழ் கலாச்சாரத்தின் நகைச்சுவை, மொழி மற்றும் சினிமா பாரம்பரியத்தை நவீன ராப் இசையுடன் இணைக்கும் இந்த முயற்சி தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், கில்லா கே உடன் இணைந்து உண்மையான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த ஒரு தமிழ் படைப்பை உருவாக்கியதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியாகியுள்ள ‘அடடா’, இந்தியாவின் சமகால இசைச் சூழலில் தமிழ் ஹிப்ஹாப் தனது தனித்துவமான இடத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற கிளாசிக் நினைவுகளை சமகால இசையுடன் இணைத்து, உள்ளூர் கலாச்சாரத்தை உலகளாவிய ரசிகர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாகவும் இந்தப் பாடல் அமைந்துள்ளது.
